கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 2023ல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அஜிதாவின் மீதான அந்த வழக்கானது தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தருவதற்காக ரூபாய் பத்தாயிரம் லஞ்சமாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமா கேட்டுள்ளார். அஜிதா தான் ஏற்கனவே தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாலும், தன்னால் தற்போது கடை நடத்த இயலாதாலும் தன்னால் பத்தாயிரம் தர முடியாது என்று கேட்டுக் கொண்டதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ரமா முன்பணமாக ரூபாய் 3000 கொடுத்தால் மட்டுமே உனது வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினரின் ஆலோசனையின் பேரில். அஜிதாவிடம் இருந்து உதவி ஆய்வாளர் ரமா இன்று (17.07. 2023) காலை சுமார் 11:00 மணி அளவில் ரூ.3000 லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்.
காவல் உதவி ஆய்வாளர் ரமா விபச்சார தடுப்பு பிரிவில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாநகரத்தை பொருத்தவரையில் 60 ஸ்பா சென்டர்கள் இயங்கி வருகிறது என்றும் ஒரு ஸ்பா சென்டருக்கு மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எஸ்ஐ ரமாவின் வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இத்தொகையை ரமா, மாதா மாதம் லஞ்சமாகப் பெற்று தனது உயர் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. எஸ்.ஐ. ரமா உயர் அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்ற விபரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விசாரணையில் விபச்சார தடுப்பு பிரிவு SI ரமாவின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தின் இருக்கையில் ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அப்பணம் பற்றி SI ராமாவிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின்னாக முரணான தகவல் கூறியதால் அந்த பணம் ஸ்பா சென்டர் உரிமையாளர்களிடமிருந்து லஞ்சமாக பெற்ற பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரமும் கைப்பற்றப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments