Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு டீன் வனிதா பாராட்டு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சனா (வயது 8) கடந்த மார்ச் 21 ஆம் தேதி இரவு, பள்ளியில் வழங்கப்பட்ட அல்பெண்டசோல் என்னும் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு உள்ளார். பின்னர் வீட்டிற்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த போது நள்ளிரவில் வயிறு வலி, தொண்டையில் எச்சில் விழுங்க முடியாமல் சிரமம், பார்வை இரண்டாக தெரிதல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இருப்பதாக பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் சிறுமியை சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

மார்ச் 22ஆம் தேதி காலை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதனை செய்த குழந்தை நல மருத்துவர் குழு சிறுமி சொன்ன தொந்தரவுகள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை வைத்தும், வீட்டிற்கு வெளியில் சிறுமி தூங்கியதால் பாம்பு கடித்ததற்கான வாய்ப்பு உள்ளது என்பதாலும் சிறுமிக்கு ஏற்பட்டிருப்பது குடற்புழு நீக்க மாத்திரை அலர்ஜி இல்லை, பாம்பு கடித்ததற்கு அதிக வாய்ப்பு இருப்பதை உறுதி செய்து, ரத்தம் உறைதல் தன்மையை கண்டறியும் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டதில் முடிவுகள் நார்மலாக இருந்தது. மேலும் சிறுமியின் உடலில் பாம்பு கடித்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. கட்டுவிரியன் பாம்பு கடித்திருந்தால் உடலில் பாம்பு கடிப்பதற்கான அடையாளங்கள் இருக்காது என்பதை வைத்தும், கட்டுவிரியன் பாம்பு கடித்தால் ஏற்படும் கண் இமைகள் முழுமையாக திறக்க இயலாமை உள்ளிட்ட மூளை நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அறிகுறிகள் சிறுமிக்கு இருந்ததாலும் அவரை கட்டுவிரியன் பாம்பு தான் கடித்து இருக்கும் என்று உறுதி செய்து உயர் சிகிச்சையை குழந்தை நல மருத்துவத் துறை தலைவர். மருத்துவர் சிராஜ்தீன் நசீர், இணை பேராசிரியர். மருத்துவர்.C.S. செந்தில்குமார், குழந்தை அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு மருத்துவர். G.S. வைரமுத்து, குழந்தை நல மருத்துவர்கள்  S.கார்த்திகேயன் மற்றும் P. சிவபிரசாத் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தொடங்கினர்.

மேலும் சிறுமிக்கு மூளை நரம்பு மண்டல செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பதை மூளை நரம்பியல் மருத்துவர் M. ராஜசேகர் உறுதிசெய்து சிகிச்சைக்கு உதவினார். சுவாச மண்டல செயலிழப்பு ஏற்பட்டதால்  சிறுமிக்கு செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 20 குப்பிகள் பாம்பு விஷமுறிவு மருந்தினை சிறுமிக்கு செலுத்தி,நரம்பு மண்டல செயல்பாட்டினை மீட்கும் மருந்துகளும் கொடுத்து சிறுமியின் உயிரை காப்பாற்றினர். கடந்த 11 நாட்கள் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு சிறுமிக்கு அளிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இந்த முழு சிகிச்சைக்கும் 3.5 லட்சம் வரை செலவாகும்.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுமிக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனை முதல்வர் மருத்துவர். K. வனிதா அவர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி சிறுமியிடம் உடல் நலம் விசாரித்து, சிறுமி முழு குணம் அடைந்ததை மருத்துவக்குழுவினரிடம் உறுதி செய்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மேலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாகவும் துரிதமாகவும் செயல்பட்டு சிறுமியின் உயிரை காப்பாற்றிய குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ குழுவினரை வெகுவாக பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *