Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து குடமுருட்டி வரை புதிய சாலை-அமைச்சர் கே. என் நேரு பேட்டி

திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்று பாலம் முதல் பஞ்சப்பூர் வரையிலான கோரையாற்று கரைகளை பலப்படுத்தி அங்கு மக்கள் போக்குவரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி குளுமாயி அம்மன் கோவில் அருகே கோரையாற்று கரைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கு சாலைகள் அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு… திருச்சி மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் ரோடு குடமுருட்டி வரை உய்யகொண்டான், கோரையாறு கரைகளை 8மீட்டர் வரை அகலபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு சுமார் 2 லட்சம் வாகன ஒட்டிகள் பயன் பெறுவார்கள்.

இதே போன்று உய்யகொண்டான் – அல்லித்துறை சாலையும் அகலப்படுத்தப்பட்டும். திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறுவதால் சாலைகள் பழுதடைந்துள்ளது. மழைக் காலத்துக்கு முன்னதாக இப்பணிகள் முடிவடைந்து புதிய தார் சாலைகள் அமைக்கப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.

முன்னதாக திருச்சி குடமுருட்டி, உய்யகொண்டான் உள்ளிட்ட பகுதிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் மேம்பாடு நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளர் சாய்குமார் நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *