Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு -ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நடப்பு 2022-23ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு ஆணை பெறப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல்-II, பிர்கா அளவில் மக்காச்சோளம்-II மற்றும் பருத்தி-II பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர்.

மேலும், நெல்- II, மக்காச்சோளம்-11 மற்றும் பருத்தி-II பயிர்களை பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகளின் நலன்கருதி தங்களது பயிர்களை பயிர் காப்பீடு செய்து கொள்ள ஏதுவாக இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களும் (08.11.2022) முதல் (15.11.2022) வரை 24 மணி நேரமும் செயல்பட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய முன்மொழி படினம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம். மேலும் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும்.

இத்திட்டத்தில், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.558/-, பருத்தி
பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.566/- மற்றும் மக்காச் சோளம் பயிருக்கு ஒருஏக்கருக்கு பிரீமியமாக ரூ.388/- செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும். எனவே, விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *