Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

உடல் உறுப்புகள் தானம் செய்த ஆட்டோ டிரைவருக்கு அரசு மரியாதை

திருச்சி அரியமங்கலத்தில் உடலுறுப்புகள் தானம் ஆட்டோ டிரைவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு மரியாதை செய்தார். தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 

இந்நிலையில் திருச்சி உக்கடை அரியமங்கலம் புங்களாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் பாபு (38). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுகிழமை (24.09.2023)இரவு அரியமங்கலம் பால்பண்ணை அருகே திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பாபு அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாபுவின் மூளை செயலிழந்தது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு இறுதி அஞ்சலி செலுத்த அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக அரசாணைப்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் ராஜ், பொன்மலை சரக காவல் உதவி ஆணையர் காமராஜ், அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செய்தனர்.

பின்னர் உயிரிழந்த பாபுவின் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆறுதல் கூறினார். அப்போது பாபுவின் தாயார் தனது இளைய மகனுக்கு அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *