Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பட்டா கத்தியுடன் 3 பேர் வழிப்பறி – காவலருக்கு காதில் வெட்டு

கடந்த சில நாட்களாக திருச்சி மாநகர பகுதிகளில் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க திருச்சி மாநகர ஆணையர் காமினி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் இன்று அதிகாலை திருச்சி கலைஞர் அறிவாலயம் பகுதியில் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக வந்த தகவலையடுத்து, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி கோட்டை காவல் நிலைய முதல் நிலைக் காவலர் அப்துல் காதர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்ட மூன்று ரௌடிகள் அங்கிருந்து தப்பிவிட முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்களை விடாமல் துரத்தி சென்று அண்ணாசிலை பகுதி அருகே பிடிக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த ரவுடிகளில் ஒருவன் தான் கையில் வைத்திருந்த பட்டாகத்தியால் அப்துல் காதரின் வலது கை, கன்னத்தில் வெட்டியதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி கீழே சரிந்தார். உடனே ரவுடிகள் மூவரும் தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பியோடிய மூவரையும் சுற்றி வளைத்து பிடிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறார்கள் தற்போது கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழிப்பறி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட போது காவலர் தாக்குதல் சம்பவம் திருச்சி போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலங்களில் திருச்சி மாநகரத்தில் போலீசார் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காயமடைந்த அப்துல் காதர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

குறிப்பாக கோயமுத்தூர், திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வரும் பேருந்துகள் நள்ளிரவில் சத்திரப் பேருந்து நிலையம் சென்று பயணிகளை இறக்கி விடாமல் கலைஞர் அறிவாலயம் பகுதியில் இறக்கிவிட்டு திருச்சி மாநகருக்குள் வருகின்றன. இதனால் 500 மீட்டர் தொலைவில் உள்ள சத்திரம் பேருந்துக்கு பயணிகள் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதை பயன்படுத்தி ரவுடிகள் மற்றும் திருடர்கள் பேருந்து பயணிகள் மற்றும் ஐடி நிறுவன ஊழியர்கள் ஆகியோரிடம் செல்போன், செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனை தடுக்க மாநகர காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *