முசிறி அருகே மீன் பிடித்த திருவிழா நடைபெற்றது.திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருத்தலையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது.திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஏரியில் மீன்பிடித்து மகிழ்ந்தனர்.
முசிறி அருகே திருத்தலையூர் கிராமத்தில் சுமார் 2600 ஏக்கர் அளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. மழை காலங்களில் இந்த ஏரியில் பெருமளவு சேகரிக்கப்படும் தண்ணீரால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.தற்போது பாசன ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ள நிலையில் ஏரியில் கிராம மக்கள் மீன் பிடி திருவிழா நடத்திட முடிவு செய்தனர்.
இதையடுத்து திருத்தலையூர், மேல கொட்டம், பேரூர்,கண்ணனூர், பாளையம்,ஜெம்புநாதபுரம் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் காலை முதலே மீன்பிடி வலைகளுடன் ஏரியில் குவிந்தனர்.பின்னர் கிராமத் தலைவர் கொடியேசைத்த உடன் பொதுமக்கள் ஆரவாரத்துடன் ஏரியில் இறங்கி மீன்பிடித்தனர்.
கத்தா, சுருக்குவலை, அரிவலை, கொசு வலை ஆகியவற்றின் உதவியோடு பொதுமக்கள் மீன்களை பிடித்தனர்.இது குறித்து பொதுமக்கள் கூறும் போது தற்போது கடலில் மீன் பிடி தடைக்காலம் அறிவித்துள்ள நிலையில் விற்பனைக்கு மீன்களின் வரத்து குறைவாக உள்ளதுடன் விலையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திருத்தலையூர் ஏரியில் மீன் பிடி திருவிழா நடத்தியதால் எங்களுக்கு நிறைய மீன்கள் கிடைத்தது.
சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து ஏரியில் மீன் பிடித்தது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று தெரிவித்தனர்.பொதுமக்கள் விரித்த வலையில் கெண்டை, கெளுத்தி, சர்க்கார், விரால், சங்கரா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது .
வருடந்தோறும் நடைபெறும் மீன்பிடி திருவிழாவில் இந்த வருடம் கடந்த வருடத்தை விட அதிகமாகவே மீன்கள் கிடைத்ததாகவும்பொதுமக்கள் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments