திருச்சியில் சாலை ஓரங்களில் மனநலம் குன்றி சுற்றி திரிந்தவர்களை அரவணைத்து முடிந்த அளவுக்கு சிகிச்சை கொடுத்து அவர்களை குடும்ப உறுப்பினர்களிடமே மீண்டும் சேர்த்து வைப்பது, தொலைந்து போன பொக்கிஷங்களை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு சமம். இப்படி மனித பொக்கிஷங்களை மீட்டுக் கொடுத்தவர் அன்பர் அன்பாலயம் செந்தில்.
திருச்சி மாவட்டம் குண்டூர், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சையில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அன்பாலயம் காப்பகம் செயல்பட்டு வருகிறது இங்கு சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பலரையும் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த தொண்டு நிறுவனத்தை செந்தில்குமார் என்பவர் நிர்வாகம் செய்து வந்தார். இவர் சாலையில் சுற்றி திரியும் மனநலம் பாதித்தவர்கள் உள்ளிட்ட பலரை தனது காப்பகத்தில் தங்க வைத்து பராமரித்து வந்தார்.
கடந்த 34 ஆண்டுகளாக திருச்சியில் இவர் இந்த தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் நேற்று தஞ்சையில் உள்ள அவரது தொண்டு நிறுவனத்தின் பணிக்காக இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது தஞ்சாவூரில் எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
திருச்சியில் கடந்த 34 ஆண்டுகளாக மன வளர்ச்சி குன்றியவர்களுக்காக சேவையாற்றி வந்த தொண்டு நிறுவன நிர்வாகியான செந்தில்குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அன்பாலயம் செந்தில் உடலுக்கு ஏராளமான சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

13 Jun, 2025
389
28 April, 2023










Comments