திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியத்தில் தனியார் விடுதியில் ஐஜேகே கட்சியினர் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர் திமுகவினர், சுகி பேலஸ் எனும் பெயருடைய விடுதியின் முன்பு திரண்டனர்.
அங்கிருந்து திமுகவினர் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு சுகி பேலஸ் விடுதியை சோதனையிட வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், தொட்டியம் தாசில்தார் அருள்ஜோதி, தேர்தல் அலுவலர் கவிதா மற்றும் போலீசார் விடுதியில் இருந்த 22 அறைகளையும் திறந்து ஒவ்வொன்றாக சோதனையிட்டனர். அங்கு தங்கி இருந்தவர்கள் போலீசாரால் விசாரிக்கப்பட்டனர்.
அவர்கள் உடமைகள் பரிசோதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விடுதியில் மொட்டைமாடி, குடிநீர் தொட்டி ஆகியவற்றில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிடப்பட்டது. சோதனை முடிவில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கட்டிடங்கள், சிமெண்ட் குடோன் திருமண மண்டபம் ஆகிய இடங்களிலும் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கும் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதையடுத்து சோதனையில் எவ்வித பணமும் கைப்பற்றப்படவில்லை என அங்கிருந்த திமுகவினரிடம் டிஎஸ்பி யாஸ்மின் தெரிவித்தார். இதையடுத்து அங்கு திரண்டு இருந்த திமுக மற்றும் இதர கட்சியினர் கலைந்து சென்றனர். கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற வெளியான வதந்தியும், அதனைத் தொடர்ந்து போலீசார் அதிரடியாக நடத்திய சோதனையும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போலீசார் அத்துமீறி நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த விடுதி அறைக்குள் நுழைந்து சோதனை நடத்தியதை கண்டித்து ஐஜேகே கட்சியினர் அங்கிருந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments