திருச்சி மாவட்டம் சமயபுரம் ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் பெருவளை வாய்க்கால் உள்ளது இந்த வாய்க்காலை வரும் தண்ணீரை சமயபுரம் மருதூர், மாகாளிக்குடி, வி.துறையூர் சேர்ந்த பொதுமக்களும் மற்றும் சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்வதற்காக வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் குளிப்பதற்காகவும் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், வாய்க்காலில் கடந்த மூன்று நாட்களாக ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதிகள் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அந்த வாய்க்காலை கடந்து செல்லும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தண்ணீரில் மீன்கள் இறந்து மிதப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு வாய்க்காலில் இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த வாய்க்காலில் மீன்கள் இறந்து கிடப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினரும், பேரூராட்சி நிர்வாகமும் விசாரணை நடத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.
Comments