Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

தெருவோர வியாபாரிகளுக்கான குழு அமைப்பதில் தாமதம் – தீபாவளிக்கு பின்பு தான் அமைக்கப்படுமா?

திருச்சி மாநகரில் மலைக்கோட்டை பகுத்திகள், பெரிய கடை வீதி, NSB சாலை என பல்வேறு இடங்களில் பல வியாபாரிகள் தெருவோர கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். பல குடும்பங்களுக்கு ஆதாரமாக விளங்கும் இந்த தெருவோர வியாபார கடைகளை கணக்கெடுப்பது, அவர்களுக்கு தேவையான வசதிகளையும், அந்த பகுதிகளில் தேவையான பல்வேறு வசதிகளையும் ஒழுங்குபடுத்தவும் குழு அமைப்பதில் மேலும் தாமதமாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

பலவகைகளில் இந்த தெருவோர வியாபாரிகள் குழுவின் தேவையிருக்கும் பட்சத்தில் தாமதம் குறித்தும், அக்குழு அமைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்குகிறார் சட்டப்பஞ்சாயத்து அமைப்பின் இணை செயலாளர் ரங்கபிரசாத்…… ‘2014ஆம் வருடம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மூலமாக தெருவோர வியாபாரிகளுக்கான ஒழுங்கமைவு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த அதிகாரபூர்வ உத்தரவின் படி, ஒவ்வொரு மாநிலமும் இந்த உத்தரவிற்கு ஒப்புதல் அளித்து தங்கள் மாநிலத்தில் உள்ள கார்ப்பொரேஷன் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கான ஒழுங்கமைவு குழுக்களை அமைக்கவேண்டும் என்பது வழிமுறை. ஆனால் தமிழ்நாட்டின் எந்த ஒரு மாவட்டத்திலும் இந்த குழு தற்போது வரை அமைக்கப்படவில்லை. முதலில் இதற்கு அந்தந்த மாநகராட்சி மூலம் எடுக்கப்படும் தெருவோர வியாபாரிகளின் கணக்கு தேவைப்படும்.

திருச்சியை பொறுத்தவரை சென்ற வருடமே சென்னையை சேர்ந்த நிறுவனம் மூலம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 5231 பேர் என்று கணக்கெடுக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் விடுபட்டவர்கள் என்று தற்போது 989 வியபடிகள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 6220 வியாபாரிகள் உள்ளனர் என்று கணக்கெடுத்துள்ளனர். இந்த கணக்கெடுப்பை பொறுத்தவரை மதுரையில் தோராயமாக 16000 வியாபாரிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் திருச்சிக்கும், மதுரைக்கும் இடையிலேயே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இதுபோக பல வருடங்களாக செயல்படுத்தப்படாமல் இருக்கும் தெருவோர வியாபாரிகள் ஒழுங்கமைவு குழுவை அமைத்து செயல் படுத்தும் பட்சத்தில் வியாபாரிகளுக்கு என இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்குள்ளாகவே அவர்கள் எந்த பிரச்னையுமின்றி வியாபாரம் செய்யமுடியும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான அரசு நிர்ணயித்த தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானதாக இருக்கும். மாநகராட்சிக்கு இதன்மூலம் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

கூடவே இந்த ஒழுங்கமைப்பு குழுவினரால் சுத்தம் குறித்த விழிப்புணர்வும், கண்காணிப்பும் இருக்கும் என்பதால் பல்வேறு இடங்கள் அசுத்தமாகாமல் இருக்கும் வாய்ப்பும் அதிகம். இதனை தவிர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவது குறையும், ரொம்ப முக்கியமாக நிறைய உணவகங்கள் இந்த தெருவோர வியாபாரம் நடக்குமிடங்களில் புதிதாக அமைக்கப்படுகிறது.

இந்த உணவகங்களில் உணவுகளில் கலப்படம் ஏற்படுவது, எடைகளில் குளறுபடி செய்வது போன்றவையெல்லாம் களையப்பட்டு, தரமான, சுத்தமான உணவுப்பொருட்கள் பெறுவதற்கு வழிவகுக்கும் மாநகராட்சி, பொதுமக்கள் மற்றும் மிக முக்கியமாக தெருவோர வியாபாரிகளுக்கு நன்மையை தரக்கூடிய இந்த தெருவோர வியாபாரிகள் ஒழுங்கமைவு குழுவை விரைவாக செயல்படுத்துவதன் மூலம் திருச்சி மாநகராட்சி மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!!. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *