திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காமராஜ் நகரில் 2 ஏக்கர் பரப்பளவில் வாணிய குளம் உள்ளது. இந்த குளத்தில் காய்ந்த நாணல் சருகுகள் மற்றும் தேங்கி கிடந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்து முடியாத பட்சத்தில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திலிருந்து 3 வாகனத்தில் வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, 5 மாநகராட்சி தண்ணீர் லாரிகள் மூலம் கூடுதலாக தண்ணீர் கொண்டுவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குளத்தில் தீப்பற்றி எரிந்த இடத்திற்கு வாகனங்கள் செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் தீயை அணைக்கும் பணியில் சற்று கடினமாகவே அமைந்தது. நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
குளத்தில் பற்றி எரிந்த தீயினை விரைந்து அணைத்ததால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில், முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குளத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக தீ வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காமராஜ் நகரில் உள்ள குளத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments