திருச்சி தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகர் கே. கே நகரில் அமைந்துள்ள மத்திய பண்டக சேமிப்பு கிடங்கினால் அதன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்படும் இன்னல்களை சுட்டிக்காட்டி, அதற்குண்டான நிரந்தர தீர்வை வழங்கிட வலியுறுத்தி,
மத்திய பண்டக சேமிப்புக் கிடங்கு கழகத்தின் (central warehousing corporation – CWC) நிர்வாக இயக்குனர் திரு சந்தோஷ் சின்ஹா அவர்களை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (27.03.2025) சந்தித்தேன்.
பலவகையான பூச்சிகளால் ஏற்படும் அசவுகரியங்களை சுட்டிக்காட்டியும், மழைநீர் வடிகால் பிரச்சனையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை சுட்டிக்காட்டியும், மேலும் இரு கோரிக்கைகளுடன் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் நான்கு குடியிருப்பு சங்கங்களின் நிர்வாகிகள் என்னைச் சந்தித்தனர். அப்போது அவர்களது பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வலியுறுத்தி என்னிடம் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி திருச்சி கே கே நகரில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மத்திய பண்டக சேமிப்பு கிடங்கிற்கு நேரில் சென்று சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டேன்.அத்துடன் கிடங்கிற்கு அருகில் வசிக்கக்கூடிய பொதுமக்களிடம் சுமார் நான்கு மணி நேரம் அவர்களின் வசிப்பிடங்களை பார்வையிட்டு அவர்களோடு கலந்துரையாடினேன்.
அதனை சுட்டிக்காட்டி இன்று CWC நிர்வாக இயக்குனர் திரு சந்தோஷ் சின்ஹா அவர்களிடம் நான்கு கோரிக்கைகளை கடிதமாகவும் வழங்கி அதன் விவரங்களை நேரிலும் எடுத்துரைத்தேன்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
10 குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50,000 மக்கள் மத்திய பண்டக சேமிப்பு கிடங்கில் உருவாகும் பூச்சிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தப் பிரச்சனை மிகவும் தீவிரமாக உள்ளது. இதற்கு CWC ஊழியர்களால் முறையான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
40 ஏக்கர் பரப்பளவு கொண்ட CWC நிலப் பகுதியில் ஒரே ஒரு மழைநீர் வடிகால் மட்டுமே உள்ளது. இதனால், திருச்சி கே.கே நகரில் மத்திய பண்டக சேமிப்பு கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து விடுகிறது. குறிப்பாக, அம்மன் நகர் பகுதி கடுமையான மழையின்போது 4 முதல் 5 அடி உயரம் வரை வெள்ளத்தில் மூழ்குகிறது. CWC நிர்வாகம் தனது நிலத்தில் போதுமான அளவில் மழைநீர் சேகரிப்பு முறையை அமைக்க வேண்டும்.
CWC மத்திய பண்டக சேமிப்பு கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளின் பிரச்சினை அதிகம் உள்ளது. CWC வளாகத்தை பாம்புகளின் புகலிடமாக மாற்றாமல் தடுக்கவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.CWC-யில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பொது கழிவறையை முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், CWC வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதாகவும், இதனால் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேற்குறிப்பிட்ட நான்கு முக்கியப் பிரச்சினைகளை உடனடியாக ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய பண்டக சேமிப்பு கிடங்கு நிர்வாக இயக்குனர் திரு சந்தோஷ் சின்கா அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன். இதற்குண்டான, உரிய நேரத்தில் எடுக்கப்படும் தங்களின் நடவடிக்கைக்காக, பொது மக்களால் நீங்கள் பெரிதும் பாராட்டப்படுவீர்கள் என்று கூறினேன்.
திருச்சி கே கே நகரில் அமைந்துள்ள மத்திய பண்டக சேமிப்பு கிடங்கு அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று நம்பிக்கை அளித்தார். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments