திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலையில் உள்ள முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றின் இடது கரையில் புள்ளம்பாடி வாய்க்கால் பிரிகிறது. இப்பாசன வாய்க்காலின் மொத்த நீளம் 90.20 கி.மீ. இது மானோடை ஏரி, ஆண்டி ஓடை ஏரி, வேட்டாகுடி ஏரி வழியாக வந்து இறுதியில் சுக்கிரன் ஏரியில் கலக்கிறது.
இவ்வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நேரடிப் பாசனமாக 8,831 ஏக்கரும், 28 குளங்கள் வாயிலாக 13,283 ஏக்கரும் என 22,114 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்திற்க்காக அரசன் பெற்று ஒருபோக சாகுபடிக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ந்தேதி வரை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் உத்தரவுப்படி திருச்சி மற்றும் அரியலூர் விவசாயிகளின் 22,114 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் நடப்பாண்டிற்கு புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட ஆணை வழங்கியுள்ளார்கள்.
அதனடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு புள்ளம்பாடி வாய்க்காலில் 50 கன அடி தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் லால்குடி எம்எல்ஏ சௌந்திரபாண்டியன், முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய பிரதிநிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments