திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது.
இதையொட்டி கோவிலில் இருந்து அர்ச்சகர்கள் காவிரிக்கு சென்று வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்து, அதைகோவில் யானை அகிலா மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அந்த புனிதநீரால் சுவாமி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் இரண்டாம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை சூரியஉதயத்திற்கு முன்பு ஆனந்த நடராஜர் தரிசனம் நடைபெறும். பின்னர் சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். அதனை தொடர்ந்து ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும்.
பின்னர் நடராஜரும், சிவகாமி அம்மனும் ஒரு சேர பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். திருஅன்னப்பாவடை நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments