தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில் இன்று (28.05.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது…… தென்மேற்கு பருவ மழைக் காலங்களில் தினமும், இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை மழை அளவு அளிக்க ஏதுவாக 24×7 பொறுப்பு அலுவலர்களை வட்டாட்சியர்கள் நியமிக்க வேண்டும்.

ஏற்கனவே கண்டறிப்பட்டுள்ள 154 பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு (Vulnerable Area) நியமிக்கப்பட்டுள்ள (Inter Departmental Zonal Team) அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். முதல்நிலை மீட்பு பணியாளர்களுக்கு (First Responders) கோட்டம் / வட்டம் அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மூலம் உரிய பயிற்சி அளித்து அறிக்கை அனுப்ப வேண்டும். பாதுகாப்பு மையங்கள் (Shelters) அடிப்படை வசதிகளுடன், நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குடிநீர், சுகாதாரமான உணவு, மின்சார வசதி, அவசர விளக்கு (Emergency Lamp), ஜெனரேட்டர் (Generator), மெழுகுவர்த்தி ஆகியன கிடைத்திட தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் அபாயகரமான கட்டிடங்கள் முன்கூட்டியே கண்டறிந்து அவற்றினை முறையாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அலுவலர்களும் TNSMART செயலியை தங்களுடைய கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். பொது மக்களுக்கும் இந்த செயலியை பயன்படுத்துவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெள்ள காலத்தில் சீரான குடிநீர் விநியோகம், மின்சாரம், சாலை, பொது சுகாதாரம், கழிவுநீர் தேக்கமின்மை ஆகியவை குறித்து கண்காணிக்கவும், குளோரினேஷன் செய்து குடிநீர் விநியோகம் செய்யவும் வேண்டும். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் குளோரினேஷன் செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

காவல்துறையினர் கோட்டாட்சியர் / வட்டாட்சியர் அலுவலகங்கள் / வட்டார வளர்ச்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு அவசர கால நட்டிவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தீயணைப்பு ஊர்திகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் உள்ள மக்களை படகு, பரிசல் மூலம் அப்புறப்படுத்தி பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க ஏதுவாக தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கோட்டம் மற்றும் வட்ட அளவில் மீட்பு பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சிகள் நடத்தவும், முதல் நிலை மீட்புப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்திடவும் வேண்டும்.

சுகாதாரத் துறை அவசர காலப் பிரிவு வாகன வசதிகளுடன் கூடிய மருத்துவக் குழு (Mobile Team) அமைத்து 24 மணி நேரமும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். தொற்று நோய்கள் ஏற்படாமல், இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வேளாண்மை / தோட்டக்கலைத் துறை, விதை, உரம் தேவையான அளவு, இருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு துறை கால்நடைகளுக்குத் தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுத்தல், தேவையான மருந்துகளை கால்நடை மருத்துவமனையில் இருப்பில் வைத்திருத்தல், கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை, இருப்பு வைத்திருத்தல் வேண்டும்.

பொதுப்பணித்துறை அனைத்து நீர்நிலைகளில் பருவ மழைக் காரணமாக வெள்ளம் ஏற்படக் கூடும் என்பதால், கரைகளை கண்காணித்தும், தேவையான அளவு மணல் மூட்டைகளை இருப்பில் வைத்திருத்தல் வேண்டும். நீர்நிலைகளில் Vulnerable Area என கண்டறியப்பட்ட பகுதிகளை 24 மணிநேரமும் கண்காணிக்க உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும். மதகுகள், தடுப்பணைகள், கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் உரிய பராமரிப்பு பணிகள் தொடர்ந்து செய்திட வேண்டும்.

தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துறை மின்சாரம் தட்டுபாடின்றி 24 மணி நேரமும் கிடைத்திடவும், பழுதடைந்த மின் கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்யவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அவசர காலங்களில் 24 மணி நேரமும் பணியாற்ற தொழில்நுட்ப பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும். உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத் துறை பொதுமக்களுக்கு உணவுப்பொருள், அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு. இல்லாமல் கிடைக்க போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை சாலைகள் மற்றும் பாலங்களில் பழுது ஏற்படின் (அரிப்பு மற்றும் உடைப்பு) உடனுக்குடன் கண்டறிந்து அதனை சரிசெய்தல் வேண்டும், சாலைகளின் குறுக்கே மரம் விழுந்தால் அதனை உடனுக்குடன் அகற்றுதல் வேண்டும். திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள ரயில்வே பாலத்திற்கு கீழ் தேங்கக் கூடிய மழைநீரை பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் உடனுக்குடன் அகற்றிட வேண்டும். வெள்ள பாதிப்பு சமயங்களில் பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்வதற்கு தேவையான மாற்று வழிகளை கண்டறியப்பட வேண்டும். பருவமழை காலங்களில் புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அனைத்து கோயில்களிலும் தங்குவதற்கு தேவையான தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். போக்குவரத்துத் துறை சார்பில் பேருந்துகளை அவசர கால பயன்பாட்டிற்காக தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். தனியார் ஆம்புலன்ஸ் வாகன விபரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு அளிக்கவும் வேண்டும்.

இயற்கை, இடர்பாடுகள் தொடர்பாக ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களுடைய துறை சார்பாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினை நடத்தி கூட்ட நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அனுப்பிட வேண்டும். பருவ மழைக் காலத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து அலுவலகங்களிலும் 24 மணிநேரமும் பொறுப்பு அலுவலர்கள் பணியாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அனைத்து துறை அலுவலர்களும் தலைமையிடத்தை விட்டு அனுமதியிலோ, விடுப்பிலோ செல்லும்போது மாவட்ட ஆட்சியர் அவர்களின் முன் அனுமதி பெற்ற பின்புதான் செல்ல வேண்டும். விடுப்பு காலத்தில் பொறுப்பு அலுவலர்கள் விபரம் தெரிவிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார்.

13 Jun, 2025
342
28 May, 2024










Comments