பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்புச்செல்வன், இப்ராஹிம் மற்றும் கந்தவேல் கொண்ட குழு திருச்சிராப்பள்ளி, மண்ணச்சநல்லூர் தாலுகா திருவள்ளாரை கிராமத்தில் உள்ள சௌக்கியராஜ் கடையில் சுமார் 1.750 கிராம் புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டது.
அதன் அருகில் உள்ள அலெக்ஸ் ஸ்டோரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்கள் சுமார் 51 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு போடுவதற்காக மூன்று சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த இரண்டு கடைகளும் உணவு பாதுகாப்பு துறையால் சீல் செய்யப்பட்டது. மேலும், மேல் நடவடிக்கைக்காக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில்…. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து, தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.
இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவுபொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
புகார் எண் : 99 44 95 95 95, 95 85 95 95 95. மாநிலபுகார் எண் : 9444042322
Comments