Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா –  நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு

108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்  வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் முக்கிய விழாவான  வைகுண்ட ஏகாதசி பெருவிழா,  திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல் பத்து – ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும். கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. டிசம்பர் 23ம்தேதி முதல் 01ஆம் தேதி வரை பகல்பத்து திருவிழா தொடங்கி நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதேபோல கடந்த 02ஆம் தேதி முதல் 12-ம் தேதி நேற்றுவரை ராப்பத்து விழாவில் பத்து நாட்கள் திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு  02 -ம்தேதி அதிகாலை 4.45மணிக்கு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை, வேடுபறி உற்சவம் மற்றும் நேற்றையதினம் நம்பெருமாள் தீர்த்தவாரியும் வைபவமும் வெகுசிறப்புடன் நடைபெற்றது

இராப்பத்து திருநாளின்போது 9-நாட்கள் தினசரி திறக்கப்பட்டு வந்த பரமபதவாசலும் நேற்று இரவு 10 மணியுடன் மூடப்பட்டது. 21 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடந்தது. காலை ஆறு மணிக்கு நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவத்தை முன்னிட்டு நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடிகளில் சரணமடைந்தார். அவரது விக்ரஹம் முழுவதும் திருத்துழாய் எனப்படும் துளசி மூலம் மறைக்கப்பட்டு மோட்சம் அளிக்கப்பட்டது. நம்பெருமாள் தனது மாலையை நம்மாழ்வாருக்கு அணிவித்து சகல மரியாதையுடன் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த வைபவம் நடைபெற்றது.

திருமாமணி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வினை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பக்திபரவசத்துடன் சேவித்தனர். இதையடுத்து நம்பெருமாள் காலை 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் வைகுந்த ஏகாதசி பெருவிழா நிறைவுபெறுகிறது. ஸ்ரீரங்கத்தில் அடுத்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ( மார்கழி 7ம் தேதி)  நடைபெறும்.

இந்த வருடத்தில் 2 வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறும். ஆகையால் 2024 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு வைபவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *